வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வைப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம: ||
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...'
என்கிறது ஒரு ஸ்லோகம்.
வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.
வியாசம் என்றால் பகுப்பது. இவர், வேதத்தை நான்காகப் பகுத்தார். அதனாலும் வியாசர் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.
உண்மையில்,
இவரது பெயர் கிருஷ்ணத்வைபாயனர். "கிருஷ்ண' என்றால், "கருப்பு'. த்வைபாயனர்' என்றால், "தீவில் பிறந்தவர்.' வியாசர் கருப்பு நிறமுடையவர். இவரது தந்தை பராசரர். தாய் சத்தியவதி. இவள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிசுவாக இருந்ததாகப் புராணம் கூறுகிறது. உச்சைச்ரவஸ் என்ற மீனவன் அதைப் பிடித்தான். அவ்வகை மீன், வழக்கத்தை விட பெரிதாக இருக்கவே, கவனமாக அறுத்தான். அதனுள் ஒரு ஆண் மற்றும் பெண் சிசு இருந்தது. அந்த மீன், உபரிச்ரவஸ் என்ற மன்னனின் மூலம் சந்தர்ப்பவசமாக கர்ப்பமானது தெரிய வந்தது. அரசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே, ஆண் குழந்தையை அவன் எடுத்துக் கொண்டான். பெண் குழந்தையை, மீனவர் தலைவனிடம் கொடுத்து விட்டான்.
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், "பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்...' என்றார்.
வியாசர் பிறந்தார். பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டது. பெற்றவள், மகனை அன்புடன் அணைக்க நெருங்கிய போது, "மீனவப் பெண்ணான நீ, என்னைத் தொடாதே...' என கூறினான்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, "நீ வேதவியாசன் ஆவாய்...' என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
"தாயே... எந்த கஷ்டமாக இருந்தாலும், நீ, என்னை நினைத்தால் போதும். அந்தக்கணமே நான் அங்கிருப்பேன்...' என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின், சத்தியவதிக்கு கன்னித்தன்மையை அளித்துவிட்டு, பராசரர் சென்று விட்டார்.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
வியாசர் மஹாபாரதப் போரை மட்டும் நேரில் காணவில்லை. குரு வம்சத்தினரான கௌரவர்களும், பாண்டவர்களும் அவரின் பேரன்கள் ஆவார்கள்.
மஹாபாரதம் மட்டுமின்றிப் பதினெட்டுப் புராணங்களையும் வேத வியாசரே தொகுத்தார் என்கின்றனர். அவர் எழுதியவற்றில் ஶ்ரீமத் பாகவதம் எழுதியதும் அவரே. ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராகவும் வியாசர் கருதப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் வியாசரை ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர்.
ஆசாரிய பரம்பரையில் வரும் ஸ்லோகத்தில் வியாசரின் பெயரும் வருகிறது.
ஆஷாட மாத பௌர்ணமியை நாம் இன்றளவும் குரு பூர்ணிமா என்றே கொண்டாடுகிறோம். அன்று தான் வேத வியாசர் பிறந்ததாக ஐதீகம். மேலும் அன்று தான் வேதங்கள் தொகுக்கப்பட்ட தினமாகவும் கருதப்படுகிறது
. "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்' என்ற நியதியை இந்த நூல் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.
ஓம் வேத வியாசரே போற்றீ போற்றி