Sunday, November 11, 2018

நெகமம் ஜமீனதாா் வரலாறு


↰ மின்தமிழ்
கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்
10/9/16dorai sundaram
சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு கண்டுபிடிப்பு


பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை
         விசயநகரப்பேரரசின் தோற்றம்
        கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள்”  என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.

       கிருஷ்ணதேவராயரின் நாயக்கத்தனம்
       எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் காலத்தில்தான். அரசின் ஆட்சிப்பரப்பில் ஆங்காங்கே இருக்கும் உள்ளூர்ப்படைதலைவர்கள் நாயக்கர்” என்னும் பதவிநிலையில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு சிறிதும் பெரிதுமாக ஆட்சிப்பரப்பு (நிலப்பரப்பு) தரப்பட்டு அதை ஆளும் உரிமையும் தரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுகொண்ட படையை இந்த நாயக்கர்கள் வைத்துக்கொள்ளலாம். இந்தப்படையில், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை ஆகிய மூன்றும் உண்டு. இப்படையைக் கட்டிக்காக்க ஒரு குறிப்பிட்ட வருவாயை அரசுக்கு அளிக்கவேண்டும். அரசர் (கிருஷ்ணதேவராயர்), இந்த நாயக்கர்களைத் தம் முழுக் கட்டுக்குள் வைத்திருந்தார். நாயக்கர்கள் தம் ஆட்சியின் வரிவருவாய்களில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்தவேண்டும். மிகுதியுள்ள மூன்றில் இரு பங்கு நாயக்கர்களின் படையைப் பேணுவதற்குச் செலவிட. இப்படை, அரசருக்காகப் பேணப்படும் ஒன்று. அரசர் எப்போதெல்லாம் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் பணிக்காகச் செல்லவேண்டும். இந்த நடைமுறை “நாயக்கத்தனம்” என்று அழைக்கப்படுகிறது. இராயர் இந்த நடைமுறையை ஒரு அரசியல் தந்திரமாகவே கையாண்டார் எனக்கூறப்படுகிறது. ஏனெனில், முகம்மதியரின் தாக்குதல்களை எப்போதும் சந்திக்கவேண்டிய சூழ்நிலையில் அரசு இருந்தது. அதற்குத் தேவைப்படும் படையனைத்தையும் அரசே நிர்வகிக்க இயலாது. நாயக்கத் தனம் இங்கேதான் பயன்பட்டது.  
        இராயரின் முதல் நாயக்கன் – சாளுவ நாயக்கன் (வீரநரசிங்க நாயக்கன்) என்பான். சோழமண்டலம்(தமிழகம்) மற்றும் கொல்லம்(கேரளம்) ஆகியன இவனது ஆட்சியின்கீழ். பெரியதொரு நிலப்பரப்பு. மிகப்பெரிய அளவில் வருவாய். இவனது வருவாய் பதினொரு இலட்சம் பொன் (Pardaos) என்று வெளிநாட்டு வரலாற்றுப்பயணியான நூனிஸ் என்பார் குறிப்பிடுகிறார்.  

               இராயரின் ஆட்சியின்கீழ் கொங்கு
        கி.பி. 1518 வாக்கில் இராயர் உம்மத்தூர் அரசரை வென்று, கொங்குப்பகுதியைக் கைப்பற்றினார்.  

       பாளையக்காரர் தோற்றம்
      கி.பி. 1529-இல், மதுரை நாயக்கராகப் பதவியேற்ற விசுவநாத நாயக்கர், பின்னர் விசயநகர ஆட்சியின்கீழிருந்து விடுபட்டு, தன்னாட்சி செய்யும் அரசரானார். அவருடைய அமைச்சரும் படைத்தலைவருமான தளவாய் அரியநாத முதலியார் எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி அவற்றின் தலைவர்களைப் பாளையக்காரர் என்ற பதவியில் அமர்த்தினார். மதுரைப்பகுதியில் தெலுங்கு நாயக்கர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். ஆனால், கொங்குப்பகுதியில் பெரும்பாலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். தெலுங்கு நாயக்கப் பாளையக்கார்ரும் இருந்துள்ளனர்.

சின்ன நெகமம்
         சின்ன நெகமம், பெரிய நெகமத்தை அடுதுள்ள ஒரு சிறிய ஊர். அண்மையில், கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நெகமம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது, சின்ன நிகமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், சின்ன நெகமத்தில் அமைந்துள்ள  செல்வ சென்ராயப்பெருமாள் கோவிலில் பூசை செய்துவருவதாகவும், அக்கோவில் சுவரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் அக்கோயிலுக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

      சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.











கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1         கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம் எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

                          கல்வெட்டு

            கல்வெட்டு-மூன்று பகுதிகளாக




2         நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம்  ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.




3         முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர்  (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.




4         வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.




5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

    1.       பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
   2  அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம         தேவ நாயக்கர்
    3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின்             மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.



6         கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
·         கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
·         இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
·         கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் பிளாக் பர்ன்”  (Black Burn)  மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
·         சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

திதி -  சப்தமி (கல்வெட்டில் - சத்தமி )
நட்சத்திரம் – அனுஷம் (கல்வெட்டில் – அனுசம்)
             (கல்வெட்டில் – நச்சேத்திரம்)
யோகம் – வைதிருதி (கல்வெட்டில் – வைதிரிதி)
கரணம் – வணசை (கல்வெட்டில் – வணிசவா)
          (கல்வெட்டில் – கறணம்)
ஓரை – குரு (கல்வெட்டில் – வியாளன்)
        (கல்வெட்டில் – ஓறை)
முக்குண வேளை – சாத்வீகம் (கல்வெட்டில் – சாற்றுமீக)
இலக்கினம் – கன்னி (கல்வெட்டில் – கன்னிகா)
·         கல்வெட்டில் காணப்படும் சில சொற்கள்
கெற்பகிரி – கர்ப்ப கிருஹம் என்பதன் திரிபு
அஷ்த்தகிரி – அர்த்தமண்டபத்தைக் குறிப்பது.
சுதிறி – சகோதரி என்பதன் திரிபு.
பெண்சாதி – மனைவியைக் குறிப்பது.
சீறணம் -  அழிவு, சிதைவு
சீறண உத்தாற(ம்) -  அழிவுபட்டதைப் புதுப்பித்தல் (திருப்பணி).
(ஜீர்ணோத்தாரணம் என்று தற்போது குறிப்பிடுகின்றனர்).

·    கல்வெட்டில் காணப்படும் பிழைச் சொற்கள்
றாம – ராம
கிளமை – கிழமை
கறணம் – கரணம்
பாழையகாரர் - பாளையக்காரர்
சுப்பறாய – சுப்பராய
னாயக்கறவறுடைய – நாயக்கரவருடைய
மாமனாறாகிய – மாமனாராகிய
அதிகாரறாகிய – அதிகாரராகிய
றாயமானிய – ராயமானிய
துழசி – துளசி
றாம செயம் -  ராம செயம்


குறிப்பு : விளக்குத்தூணுக்கருகில், நடுகல் சிற்பத்தை ஒத்த ஒரு சிற்பம் காணப்படுகிறது. கோயிலுக்குப்பணி செய்த வேறு கொடையாளர் (கணவன்-மனைவியர்) ஆக இருக்கக்கூடும்.

                                                    நடுகல் சிற்பம்



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

Monday, June 18, 2018

ஜோதிடம் − சூரியன்

சூரியன்
----------------

சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு  நாடு  என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில்  கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.
சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது.

சூரியனுக்கு
ஆட்சி வீடு சிம்மம்
உச்ச வீடு மேசம்
நீச வீடு துலாம்

குரு, செவ்வாய், சந்திரன், புதன் ஆகியன நட்பு கிரகங்கள்

சனி, சுக்கிரன் ராகு கேது பகை கிரகங்கள்

Thursday, May 31, 2018

விஷ்ணு சகஸ்ரநாமம்-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே!!
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே!!

சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

Wednesday, May 30, 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்-4




அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே



மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு, 
பலகோடி நூறாயிரம் 
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!உன் 
செவ்வடி செவ்விதிருக் காப்பு!


Image may contain: 1 person, cloud

Monday, May 28, 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்-3

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வைப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம: ||
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...' 

என்கிறது ஒரு ஸ்லோகம்.
வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.
வியாசம் என்றால் பகுப்பது. இவர், வேதத்தை நான்காகப் பகுத்தார். அதனாலும் வியாசர் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.
உண்மையில்,
இவரது பெயர் கிருஷ்ணத்வைபாயனர். "கிருஷ்ண' என்றால், "கருப்பு'. த்வைபாயனர்' என்றால், "தீவில் பிறந்தவர்.' வியாசர் கருப்பு நிறமுடையவர். இவரது தந்தை பராசரர். தாய் சத்தியவதி. இவள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிசுவாக இருந்ததாகப் புராணம் கூறுகிறது. உச்சைச்ரவஸ் என்ற மீனவன் அதைப் பிடித்தான். அவ்வகை மீன், வழக்கத்தை விட பெரிதாக இருக்கவே, கவனமாக அறுத்தான். அதனுள் ஒரு ஆண் மற்றும் பெண் சிசு இருந்தது. அந்த மீன், உபரிச்ரவஸ் என்ற மன்னனின் மூலம் சந்தர்ப்பவசமாக கர்ப்பமானது தெரிய வந்தது. அரசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே, ஆண் குழந்தையை அவன் எடுத்துக் கொண்டான். பெண் குழந்தையை, மீனவர் தலைவனிடம் கொடுத்து விட்டான்.
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், "பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்...' என்றார்.
வியாசர் பிறந்தார். பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டது. பெற்றவள், மகனை அன்புடன் அணைக்க நெருங்கிய போது, "மீனவப் பெண்ணான நீ, என்னைத் தொடாதே...' என கூறினான்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, "நீ வேதவியாசன் ஆவாய்...' என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
"தாயே... எந்த கஷ்டமாக இருந்தாலும், நீ, என்னை நினைத்தால் போதும். அந்தக்கணமே நான் அங்கிருப்பேன்...' என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின், சத்தியவதிக்கு கன்னித்தன்மையை அளித்துவிட்டு, பராசரர் சென்று விட்டார்.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
வியாசர் மஹாபாரதப் போரை மட்டும் நேரில் காணவில்லை. குரு வம்சத்தினரான கௌரவர்களும், பாண்டவர்களும் அவரின் பேரன்கள் ஆவார்கள்.
மஹாபாரதம் மட்டுமின்றிப் பதினெட்டுப் புராணங்களையும் வேத வியாசரே தொகுத்தார் என்கின்றனர். அவர் எழுதியவற்றில் ஶ்ரீமத் பாகவதம் எழுதியதும் அவரே. ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராகவும் வியாசர் கருதப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் வியாசரை ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர்.
ஆசாரிய பரம்பரையில் வரும் ஸ்லோகத்தில் வியாசரின் பெயரும் வருகிறது.
ஆஷாட மாத பௌர்ணமியை நாம் இன்றளவும் குரு பூர்ணிமா என்றே கொண்டாடுகிறோம். அன்று தான் வேத வியாசர் பிறந்ததாக ஐதீகம். மேலும் அன்று தான் வேதங்கள் தொகுக்கப்பட்ட தினமாகவும் கருதப்படுகிறது
. "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்' என்ற நியதியை இந்த நூல் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.
ஓம் வேத வியாசரே போற்றீ போற்றி

விஷ்ணு சஹஸ்ரநாமம்-2

வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் ஸக்தே பௌத்ர மகல்மஷம் |
பராஸராத் மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் ||

நித்தம்  நாராயணனை  நினைப்போம்
விஷ்ணு  ஸஹஸ்ரநாமம்
வியாசர் வணக்கம்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்தளித்தவர் வியாச பகவான். அவரை முதலில் வணங்குவோம். ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வசிஷ்டர். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. சக்தியின் பிள்ளை பராசரர். பராசரரின் பிள்ளை வியாசர். வியாசரின் பிள்ளை சுகப்பிரம்மம்.
இவ்வாறு திருமாலின் தமராகப் பலதலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாச பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாச பகவானை முதலில் வணங்குவோம்.
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!

விஷ்ணு சஹஸ்ரநாமம்-1

நண்பர்களுக்கு வணக்கம்.
நம் பாரத நாடு சுபிட்சம் பெறவும்; தருமம் தழைத்து அதர்மம் விலகிடவும்;
நாம் அனைவரும் பக்தி சிரத்தையடன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வோம்.....
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
விளக்கம்:-
வெண்மையான ஆடை உடுத்தவரும் எங்கும் நிகைந்தவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகள் உள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகியவரை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காகத் தியானம் செய்யவேண்டும்
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!

Friday, March 23, 2018

ஒருகுட்டி கதை


ஒருகுட்டி கதை

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,

அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.

அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.

என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.

 என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.
வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.

உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும்
நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...





நெகமம் ஜமீனதாா் வரலாறு

Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...